வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

கொச்சையாக்கலாமா ?




(முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து )

அவன் என்னைக் கொச்சைப்படுத்திவிட்டான் என்று சொல்லி வேதனைப்படுகின்றோம்; சினப்படுகின்றோம்.


கொச்சைப்படுத்துதல் என்றால் என்ன ?


போருக்குச் சொல்லும் குதிரைகளை அந்நாளில் அழகுபடுத்துவர். குதிரைகளின் கழுத்தில் நீண்டு வளர்ந்து தொங்கும் பிடரிமயிரைக் கத்தரித்து விடுவதும் அந்த அழகு செய்வதில் அடங்கும்.இவ்வாறு கத்தரித்து விடப்பட்ட பிடரிமயிரை உடைய குதிரையைக் " கொய்யுளை மா " என்று சொல்லுவர்.


" கொய்தல் " என்பதற்குக் குறைத்தல் என்பது பொருள். " உளை " என்பதற்கு அசைகின்ற பிடரிமயிர் என்பது பொருள். மயிர் குறைக்கப்பட்ட மாவே இங்குக் " கொய்யுளை மா " எனப்பட்டது.


இந்தக் கொய்தல் அடியாகத்தான்

கொய் - ‍கொய்சு - கொய்ச்சு - கொய்ச்சை - கொச்சை

என்னும் சொற்களும் தோன்றின. ஒருவருக்கு உரிய மதிப்பைக் குறைத்து விடுதலே " கொச்சைப்படுத்துதல் " என்பதற்குப் பொருளாகும்.


மொழிவழக்கிலும் கொச்சைவழக்கு என்பது இன்று பேசப்பட்டு வருகின்ற ஒன்றாகும்.
மொழியில் உள்ள சொற்களைச் செப்பமாகப் பேசாமல் அதனதன் வடிவைச் சிதைத்துக் குறைத்துப் பேசுவதே " கொச்சை " என்பதற்குப் பொருளாகும்.


சொற்களை அப்படியே முழுமையாகப் பேச முடியாமல் திரித்துக் குறைத்துப் பேசுவதும் எழுதுவதும் தவிர்க்க முடியாததே. சான்றோர்கள் வழக்கிலும் இது நிகழ்ந்து வந்துள்ளது.


" இந்தப் பூவினை மோந்துபார் " என்று சொல்கிறோம். மோந்துபார் என்பதன் உண்மையான வடிவம் " முகர்ந்து பார் " என்பதுதான்.

முகர் - முகர்தல் - முகர்ந்து பார்த்தல் - மோர்ந்து பார்த்தல் - மோந்து பார்த்தல் என்றுதான் இச் சொல் சிதைந்தது.


முகர் - முகர்ப்ப நாய் - மொகர்ப்ப நாய் - மோர்ப்ப நாய் - மோப்ப நாய் என்றெல்லாம் இந்த வகையில்தான் நாம் இன்று பேசியும் எழுதியும் வருகிறோம்.


திருவள்ளுவரும் இந்த எளிய பேச்சு வழக்கினை ஒத்துக்கொண்டு " மோப்பக் குழையும் அனிச்சம் " என்றே சொல்லியுள்ளார்.

மொழியின் சொற்கள் பலவும் இவ்வாறு பேச்சு வழக்கில் திரிய நிறைய வாய்ப்பிருக்கிறது. பேச்சுத்தமிழ் என்பது பெரும்பாலும் முழுச்சொற்களின் சிதைந்த வடிவங்களையே கொண்டுள்ளது.

வந்து ஆயிற்று என்பது " வந்தாச்சு " என்றும் தின்று ஆயிற்று என்பது " தின்னாச்சு " என்றும் திரிவது போல நிறையச் சொல்லலாம்.

எளிமை காரணமாக - ‍விரைவு காரணமாக மொழியின் சொற்கள் பேச்சு வழக்கில் திரியலாம். மொழியின் இந்த இயல்பை உணராமல் பேச்சு வழக்குத்தான் உண்மையான தமிழ். அந்தத் தமிழைத்தான் எழுதவும் வேண்டும் என்போர்கூட நம்மிடையை உள்ளனர்.


" நஞ்ச , புஞ்ச " என்று பேசுகிறோம். ஆதிமாந்தன் வேளாண்மையை எப்படி உருவாக்கினான் என்ற வரலாற்றை இந்தக் கொச்சை வழக்கினால் அறிந்து கொள்ள முடியாது.கல்லும் முள்ளுமாய் இருந்த நிலம் விளைவிற்காகச் செய்யப்பட்டது.அதுவே " செய் " என்று ஆயிற்று. தமிழில் " செய் " என்பதற்கு " நிலம் " என்று பொருள். நன்றாகச் செய்யப்பட்ட நிலம் " நன்செய் " என்றும் புன்மையாகச் செய்யப்பட்ட நிலம் " புன்செய் " என்றும் இந்த வகையில்தான் பெயர் பெற்றன.


நம்மைக் கொச்சைப்படுத்தினால் நம் மதிப்பு மட்டும்தான் குறையும். மொழியைக் கொச்சைப்படுத்தினால் நம் முன்னோர்கள் கண்ட அனைத்து அறிவும் கொச்சைப்பட்டு குறைகின்றது. தன்மானம், இனமானம் என்று மேடையில் முழங்கும் போலிகளுக்கு மொழிமானம் என்கின்ற ஒன்று தெரிவதேயில்லை. உண்மையில் மொழிமானமே எல்லா மானங்களுக்கும் மூலமும் முதலும்.