வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

வள்ளுவரும் வாலியும் -2

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. (குறள் 45)


இல்லறம் - என‌
இயம்பப் பெறும் -

வாழ்க்கை
வயலில் ...

அன்பும் அறனும் விதைநெல் ;
பண்பும் பயனும் விளைநெல் !



அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்றை புறம்சொல்லும்
புன்மையால் காணப் படும். (குறள் 185)


அறம்பேசும் நெஞ்சம்
அதுவல்ல என்பதை - அது
புறம்பேசும் நேரம்
புரிந்து கொள்ளும் மன்பதை !



அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் (குறள் 35)


பொறாமையைப் -
பொடி;
அவாவை -
அடி;
வெகுளியை -
விடு ;
சுடு சொல்லைச் -
சுடு ;

நான்கும்
நான்கு தீங்கு ;அவற்றின்
நிழலில்
நிற்காமல் நீங்கு !

நான்கையும் புறம் - தள்ளி
நடத்துதல் அறம் !


கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றுஈண்டு வாரா நெறி. (குறள் 356)


மெய்கண்டாரிடம் செல் ;
மெய்ப்பொருளைக் கல் !

பிறக்கையில் ஒரு குழி ;
இறக்கையில் ஒரு குழி ;

இவை
இரண்டையும்
தவிர்த்திடத்
தென்படும் ஒரு வழி !