வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

தெய்வத் தமிழ்மாலை



முத்து நிகர்மாலை முன்வந் தருள்மாலை
சித்து நிறைமாலை செம்மொழிசெய் - பத்திநிறை
அம்பலவன் பேர்துதிக்கும் அன்புத் தமிழ்மாலை
சம்மத மாலையெனச் சாற்று.

பூமாலை நல்ல புகழ்மாலை போற்றியெனும்
பாமாலை பத்தி பகர்மாலை - மாமாலை
நெஞ்சில் நிறைமாலை நேர்கதி சொல்மாலை
பஞ்சாட் சரமாலை பாடு.

ஏற்ற புகழ்மாலை இனிய தமிழ்மாலை
கூற்றந் தவிர்மாலை குற்றமதை - மாற்றிவிடும்
போதத் தவமாலை புத்தமைதி கொண்டுலவும்
நாதமலை நம்மாலை நம்பு.

தேனாய் இனித்துத் திகழ்மாலை நம்மை
ஊனாய் உருக்கும் உயிர்மாலை - கானாற்று
வெள்ளமென நல்லருள் மேவுமாலை நம்பிக்கை
கொள்ளென்னும் பாமாலை பாடு.

ஓதுவார் நெஞ்சிலுறை ஒப்பற்ற பாமாலை
தீதுதவிர் தேவாரச் சீர்மாலை - மோதுபுகழ்
கொள்மாலை வெள்ளிமாலைக் கோன்மாலை நம்மிதயப்
புள்மாலை என்றே புகல்.

சாற்றும் மறைமாலை சந்தனச் சொல்மாலை
பொற்றற் குயர்மாலை பூமாலை - தோற்றம்
தருமாலை நம்மின் தொடர்மாலை நால்வர்
பெருமானார் சொல்மாலை பேசு.
..........................................................

வெண்பாச் சிற்பி வி.இக்குவனம் அவர்கள் எழுதிய தெய்வத் தமிழ்மாலை(வெண்பா அந்தாதி) என்னும் நூலில் எனக்குப் பிடித்த பாக்களை இங்கே தொகுத்துக் கொடுத்துள்ளேன்.