வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

Showing posts with label முனைவர் சு.செளந்தரபாண்டியன். Show all posts
Showing posts with label முனைவர் சு.செளந்தரபாண்டியன். Show all posts

சொல்லும் நுட்பப் பொருளும்

ஒரு சொல்லைப் மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது பொதுப் பொருள்தான் தெரியும். இருப்பினும் அதிலுள்ள நுட்பப் பொருளை அகராதியைக் கொண்டு அறிந்துக் கொள்ள முடியாது.
மொழியொடு கலந்துப் பழகும் மக்களிடமிருந்துதான் அதன் மணத்தை நுகர முடியும்.புத்தகங்கள் என்பவை பாதை தான் காட்ட முடியும் .அதில் பயணிக்க வேண்டுமெனில் பட்டறிவு என்பது
தேவையானது ஒன்றாகும்.

நுட்பப் பொருளை மொழியாக்கம் செய்ய விழைக்கின்றவர்கள் கண்டிப்பாக அறிந்துக் கொள்ள வேண்டியது ஒன்றாகும்.மரத்திலிருந்து கிளைகள் பிரிந்துச் செல்லுவதைப் போல் வேர்ச்சொற்களிலிருந்து சொல்லைத் திரித்து பல புதியச் சொற்கள் உருவாக்குவதற்கு உதவும்.

இருத்தல் என்னும் சொல்லை , மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது, அது " உள்ளது " என்னும் பொதுப் பொருளைத்தான் தரும்.உற்று நோக்கினால் பல நுட்பப் பொருள்கள் உள்ளதை உணர முடியும்.

1.இருத்தல் - பொறுத்தல்
கொஞ்சம் இரு. பறக்காதே
இரு இரு எல்லாம் நடக்கும்.

2.இருத்தல் - உட்கார்தல்
நீங்க இருக்கையில் இருங்க, நான் நிற்கிறேன்.

3.இருத்தல் - தங்குதல்
அம்மா வீட்டில் நீ இருக்கக் கூடாது.

4.இருத்தல் - வாழ்தல்
நல்ல இரு தாயே

5.இருத்தல் - தொடர்பு இருத்தல்
உனக்கும் எனக்கும் என்ன இருக்கிறது ?

6.இருத்தல் - பணி புரிதல்
அந்தக் கடையில் கொஞ்ச நாள் இருந்தேன்.

7.இருத்தல் - பழகுதல்
என்னுடன் அவன் நன்றாகத் தான் இருந்தான்.

8.இருத்தல் - நடந்து கொள்ளல்
இனியாவது ஒழுங்க இரு.

9.இருத்தல் - ஆண் பெண் புணர்வு
இருந்துவிட்டுக் குளிக்காமல் வரக் கூடாது.

இத்தனை நுட்பப் பொருளை அகராதியில் அலைந்துத் தேடினாலும் உங்களுக்கு கிடைத்து விட முடியாது. அகராதி இவற்றை எல்லாம் தொகுக்க வேண்டும் , அப்பொழுதுதான் பயன் உள்ளதாக இருக்கும். புதியச் சொற்களைப் படைப்பதற்கும் எதுவாக இருக்கும்.
மேற்கண்ட சிறப்பு தமிழுக்கு உரித்தானது. இதைக் கொண்டு ஆயிரம் ஆயிரம் சொற்களை உருவாக்க அறிஞர்கள் மட்டுமல்ல தமிழ் மேல் பற்றுள்ள பண்பாளர்கள் செயலாற்ற வேண்டும் என்பதே என்னுடைய அவா.


(இது முனைவர் சு.செளந்தரபாண்டியன் அவர்களின் கருத்தைத் தழுவி எழுதப்பட்ட கட்டுரையாகும்.)