கொஞ்சும் குரலழகு ! மிஞ்சும் எழிலழகு !
துஞ்சும் ஒயிலழகு ! கெஞ்சும் இதழழகு !
இத்தனையும் காண துடிக்கிறது ! இன்னும்
எத்தனைநாள் சொல்மக ளே !

மடியில் தவழ்ந்திடு என்மகளே ! இங்கே
இடியாய் விழுகிறது வார்த்தைகள் எல்லாம்,
அகமோ அழுது துடிக்கிறது உந்தன்
முகம்காணத் தான்மக ளே !

பெண்ணாய்ப் பிறப்பது மாதவமாம்! இம்மண்ணில்,
கண்ணாய் ! மணியாய் ! நதியாய் ! மொழியாய் !
கதைக்கிறது பெண்ணை, இருந்தும் அவளை
வதைக்கிறது இன்னுமிங் கே !

மணந்த உடனே கருத்தரிக்க வேண்டுமாம்
கண்ணே ! இ(ல்)லையெனில் கண்ணீர்த்தான் - மங்கைக்கோ
இங்கே மலடியெனும் பட்டம்,மணந்த
சிங்கமோ மார்த்தட்டிக் கொண்டு.

( நன்றி அகரம் அமுதா அவர்களே )