வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

வண்ணங்களில் சில எண்ணங்கள்

( படித்ததில் பிடித்தது - அப்துல் இரகுமான் அவர்களின் வரிகள் )



வேடிக்கை யானவன்தான்
மனிதன் ! முரண்பாடே
வாடிக்கை அவனுக்கு
வண்ணத்தின் அருத்தங்கள்
வெவ்வேறு நேரத்தில்
வெவ்வேறு அவனுக்கு

சுதைவீடு பழசானால்
சுண்ணாம்பு கொண்டுவந்து
வெள்ளை அடித்துத்தன்
வீட்டைப் புதுப்பிப்பான்
சதைவீடு பழசாகும்
தருணத்தில் தலைநரைத்தால்
வெள்ளையின்மேல் கறுப்புநிறம்
விரும்பி அடிக்கின்றான்.


கறுப்பென்றால் துக்கத்தைக்
காட்டும் என்பான் ; கன்னியரின்
கறுப்பு விழிகண்டால்
களிப்புற்று ஆடுவான்.

சிவப்புநிறம் ஆபத்தின்
சின்னமென்பான் ; பெண்கன்னம்
சிவந்து தலைகுனிந்தால்
நாணத்தின் குறியென்பான்

மஞ்சள் நிறமென்றால்
மங்கல நிறமென்பான்
மஞ்சள்கா மாலைவந்தால்
மங்கலநோய் என்பதில்லை



மனப்பத் திரிக்கைக்கு
மஞ்சள் தடவுவான்; ஆம்
மனச்செய்தி அச்சடித்தால்
மஞ்சள்பத் திரிக்கையென்பான்.

பசும்புல்லைப் பூமியின்
பச்சை உடையென்பான்
உடையவிழ்க்கும் வருணையைப்
பச்சை எழுத்தென்பான்.



கரும்நீலம் காக்கும்
கடவுளின் நிறமென்பான்
உடல்நீலம் பாய்ந்துவிட்டால்
உயிர்நீங்கும் குறியென்பான்.

எந்தப் புரட்சி
எங்கே நடந்தாலும்
அந்தப் புரட்சிக்கு
அமைக்கின்ற பெயர்களெல்லாம்
வண்ணக ளால், அன்றோ
வைக்கின்றார் ; உலகத்தில்

செல்வம் பொதுவாக்கச்
சிவப்புப் புரட்சியென்பார்
பயிரின் வளம்பெருகப்
பசுமைப் புரட்சியென்பார்
வீடெல்லாம் பால்பெருக
வெள்ளைப் புரட்சியென்பார்



வளங்கள் இல்லையென்றால்
வாழ்க்கையில் அழகில்லை
எண்ணங்கள் இல்லையென்றால்
எதுவுமே இங்கில்லை.