வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

முயற்சி...




முடியும் என்றால்
முயற்சி செய் ...

முடியாது என்றால்
பயிற்சி செய் !!!





,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நன்றி: தென்றல் இதழ்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நாராயணனும் நாமும் ...



ஆண்டவன் என்பது
அறுசுவை விருந்து
அதை
உண்ண மறுப்பதால்
உண்டாகும் இழப்பு
நல்விருந்தாகிய
நாராயணனுக்கு இல்லை...

பாதிப்பு எல்லாம்
பல்சுவை என்னும்
பக்திப் பரவசத்தைப்
பருகும்
பாக்கியமற்றவர்களாக
போகும் நமக்கே !!!

நெருப்பிற்கு மட்டுமா ?



எரியும் நெருப்பிற்கு
எப்பொழுதும் தெரிவதில்லை
எரிவது எதுவென்று !!!

இயல்பு...




இயல்பாய்த் தான் இருக்கிறது
இருந்தாலும் அழகாய்த்தான் இருக்கிறது
இயற்கை !!!


வேண்டும் ! வேண்டும் !




இறந்தாலும் இருவிழியாலே
இவ்வுலகைக் காணவேண்டும்

இறந்தாலும் இவனாலே
இன்னலில்லை யெனவேண்டும்

இறந்தாலும் ஏதேனும்
செய்தேனும் இறக்கவேண்டும்

இல்லையெனில் இங்கேநான்
பிறவாமல் இருக்கவேண்டும்

தங்கம்...



தங்கத் தாலி
போட்டால் கிடைக்குமாம்
தங்கத்திற்கு வேலி

கிடைக்குமா ?



வெட்டுண்ட காயம்
வேதனையில் அழுகிறது வானம்
கிடைக்குமா நாயம்

மலரும்பொழுது...



மலரும்பொழுது அரும்பு
மரமாகி விட்டால்
மனமோ இரும்பு

கா(ரி)யம்...



காயத்தைக்
கண்டு
கண்ணீர் விட்டு
கலைந்து செல்வது அல்ல...
களைவதே
காரியம் !

வண்ணா !



மல்லரை வென்ற மணிவண்ணா! உந்தன்
மலரடி போதும் மணிவண்ணா! எந்தன்
கவலையைப் போக்கிடும் கார்வண்ணா! இன்பக்
கவிதையைக் கேள் கார்வண்ணா!

அவனியைக் காக்கும் அகில்வண்ணா! உந்தன்
அவயமே போதும் அகில்வண்ணா! எந்தன்
மமதையைக் போக்கும் முகில்வண்ணா! இன்பத்
தமிழ்தனைக் கேள் முகில்வண்ணா!

எண்ணில் இருக்கும் எழில்வண்ணா! உந்தன்
உணர்வொன்றே போதும் எழில்வண்ணா! எந்தன்
பிணியினைப் போக்கும் பிறைவண்ணா ! இன்ப
மணிமொழியைக் கேள் பிறைவண்ணா !

குறையினைத் தீர்க்கும் குழல்வண்ணா ! உந்தன்
குறும்பொன்றே போதும் குழல்வண்ணா ! எந்தன்
வறுமையைப் போக்கும் விழிவண்ணா ! இன்ப
மறையினைக் கேள் விழிவண்ணா !

மகிழ்ச்சியை நல்கும் மலர்வண்ணா ! உந்தன்
மகிமையே போதும் மலர்வண்ணா ! எந்தன்
பிறவியைப் போக்கும் புவிவண்ணா ! இன்பம்
நிறைந்திட கேள் புவிவண்ணா !

***********************************************************************
புன்னகையால் புவியாளும் பாலகனுக்கு பைந்தமிழால் படைக்கும் பாமாலை (வெண்பா மாலை)
*************************************************************************

(ஏ)மாற்றம்...

எழுதுவதற்கு நேரமில்லை
எழுதுகோலுக்கும் வேலையில்லை

எழுத்துப்பிழைக்கும் குறைவில்லை
ஏன் இத்தனையும் ??

எல்லாமே மின்னியல்
என்றாலும் மிகையுமில்லை

எழுச்சியே என்றாலும்
(ஏ)மாற்றமே என்போம்




காலவெள்ளத்தில்
கடிதங்களெல்லாம்
காணாமல் போகுவதைக்
காண்கையில்

அ(ரு)மை...

உழைப்பாளர் தினம்



சென்னை
ஒரு
தலைநகரம் மட்டுமல்ல‌
சிலைநகரமும் கூட.

இங்கே
உழைப்பாளர்கள்
சிலையில் கூட‌
உழைத்துக்
கொண்டுதான் இருக்கிறார்கள் !

தலைவர்கள்
சிலையில் கூட‌
பேசிக் கொண்டுதான்
இருக்கிறார்கள்

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
உழைக்கும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியை மனநிறைவைக் கொண்டாட வேண்டிய நாள்.அவர்கள் மேன்மையுற பாடுபடுவோம் .

(பொன்.செல்வகணபதி அவர்களின் கவிதை)

தெய்வத் தமிழ்மாலை



முத்து நிகர்மாலை முன்வந் தருள்மாலை
சித்து நிறைமாலை செம்மொழிசெய் - பத்திநிறை
அம்பலவன் பேர்துதிக்கும் அன்புத் தமிழ்மாலை
சம்மத மாலையெனச் சாற்று.

பூமாலை நல்ல புகழ்மாலை போற்றியெனும்
பாமாலை பத்தி பகர்மாலை - மாமாலை
நெஞ்சில் நிறைமாலை நேர்கதி சொல்மாலை
பஞ்சாட் சரமாலை பாடு.

ஏற்ற புகழ்மாலை இனிய தமிழ்மாலை
கூற்றந் தவிர்மாலை குற்றமதை - மாற்றிவிடும்
போதத் தவமாலை புத்தமைதி கொண்டுலவும்
நாதமலை நம்மாலை நம்பு.

தேனாய் இனித்துத் திகழ்மாலை நம்மை
ஊனாய் உருக்கும் உயிர்மாலை - கானாற்று
வெள்ளமென நல்லருள் மேவுமாலை நம்பிக்கை
கொள்ளென்னும் பாமாலை பாடு.

ஓதுவார் நெஞ்சிலுறை ஒப்பற்ற பாமாலை
தீதுதவிர் தேவாரச் சீர்மாலை - மோதுபுகழ்
கொள்மாலை வெள்ளிமாலைக் கோன்மாலை நம்மிதயப்
புள்மாலை என்றே புகல்.

சாற்றும் மறைமாலை சந்தனச் சொல்மாலை
பொற்றற் குயர்மாலை பூமாலை - தோற்றம்
தருமாலை நம்மின் தொடர்மாலை நால்வர்
பெருமானார் சொல்மாலை பேசு.
..........................................................

வெண்பாச் சிற்பி வி.இக்குவனம் அவர்கள் எழுதிய தெய்வத் தமிழ்மாலை(வெண்பா அந்தாதி) என்னும் நூலில் எனக்குப் பிடித்த பாக்களை இங்கே தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

சித்திரைப் பெண்ணே வருக !



சித்திரைப் பெண்ணே வருக ! நல்ல‌
உத்தரவைக் கொண்டு வருக !

சித்திரைப் பெண்ணே வருக ! இன்பம்
இத்தரையில் பொங்க வருக !

சித்திரைப் பெண்ணே வருக ! நல்ல‌
புத்தியினை நாளும் தருக !

சித்திரைப் பெண்ணே வருக ! என்றும்
சத்தியமே வெல்ல வருக !

சித்திரைப் பெண்ணே வருக ! நமக்கு
அத்தனையும் அள்ளித் தருக !

பெண்பா !



புடைக்க;பொடிக்க;பெருக்க;பொரிக்க;
துடைக்க;சுமக்க;துவைக்க;பழிக்க;
மடிக்க;சமைக்க;மிதிக்க;படுக்க;
வடிக்கமட்டும் தானாபெண் கள்.



மானென்றும்,மீனென்றும்,மின்னலென்றும்,மேகமென்றும்,
வானென்றும்,வேலென்றும்,வேங்கையென்றும்,வேதமென்றும்,
பொன்னென்றும்,பூவென்றும்,பூமியென்றும்,போதையென்றும்,
சொன்னது போதும்பெண் ணை.




கையுண்டு,வாயுண்டு,மூக்குண்டு,நாக்குண்டு,
மையுண்டு,பல்லுண்டு,தோலுண்டு,நாசியுண்டு,
கண்ணுண்டு,காலுண்டு,காதுண்டு,தேகமுண்டு,
பெண்ணுக்கு இதயமு முண்டு.

உண(ர்)வு !



தின்ன தின்ன‌
திகட்டாத தித்திக்கும் உணவு !

கருவறையில்
கிடைத்த உணவு !

காலமெல்லாம் கிடைக்க‌
கடவுளை வேண்டும் உணவு !

அகங்காரம் கொள்ள வைக்கும்
அருமை பெருமை உடைய உணவு !

அலங்காரம் செய்து
அடையாய் வடையாய் அவதரித்து
அவனியில் பவனி வந்தாலும்
விட்டுவைக்காது
வெளுத்துக் கட்டச் சொல்லும்
வகை வகையான உணவு !

காரம் நீயில்லை எனிலென்
ஆவியைப் பறிக்கும் உணவு !

இளக்காரமாய் பணம்
இருப்பவர் பலர் பார்க்கும் உணவு !

பலகாரமாய் நீராகாரமாய்
பக்கத்தில் நீயிருந்தால் போதும்
பொன்னோ பொருளோ
வேண்டாமெனச் சொல்லும் உணவு !

பங்காரமாய் ஏழைகள்
பார்க்கும் உணவு !

சிருங்காரம் செய்து
சிம்மாசனத்தில் வைக்க கூடிய‌
சிறப்பு மிக்க உணவு !

வரும் தலைமுறைக்கு
விவகாரம் ஆகும் உணவு !

ஓம்காரமாய் ஒயாது
ஒலிக்கும் உணவு !

கனவிலும்,காணும்
காட்சியிலும்,பொருளிலும்
கண்முன்னே வந்துநிற்கும் உணவு !

உணவு உணவென‌
உருகும் என்னுருவம் கண்டால்
உங்களையும் கொஞ்சம்
உண்ணச் சொல்லும் உணவு !

என்றும் எப்பொழுதும்
என்னை இளமையாக வைத்திருக்க‌
என் அருமை தாய்
எனக்கு ஊட்டிய தமிழுண(ர்)வு !

முகம்!



அழுதாலும் குழந்தை
அழகுமுகம் - அதைவாரி
அணைத்திடும் அன்னை
அன்புமுகம்!

அண்ணன் தங்கை
பாசமுகம் - ஓர்
அழகுக் கன்னி
ஆசைமுகம்!

கருணைகொண்டார்
பரிவுமுகம் - குரு
அறியாமை அகற்றும்
அறிவுமுகம்!

க‌ண்ணோடு க‌ண்ணுர‌ச‌
மோத‌ல்முக‌ம் - க‌னிந்து
க‌ண்ணோடு க‌ண்பேச‌
காத‌ல்முக‌ம்!

வெற்றிப் பாதையில்
ஏறுமுக‌ம் - திடீர்
வீழ்ச்சிச் ச‌றுக்க‌லில்
இற‌ங்குமுக‌ம்!

இருப‌துக‌ளின் முக‌ம்
அவ‌ச‌ர‌முக‌ம் - வாழ்ந்த‌
அறுப‌துக‌ளின் முக‌ம்
அனுப‌வ‌முக‌ம்!

ஆண்ட‌வ‌ன் முருக‌னுக்கோ
ஆறுமுக‌ம்...
அட‌டே ம‌னிதா
உன‌க்குத்தான்
எத்த‌னை முக‌ங்க‌ள்!


***************************************************

(படித்ததில் பிடித்தது -- கி.கோவிந்தராசு அவர்கள் எழுதிய வேர்களின் வியர்வை என்னும் கவிதைத்தொகுப்பில் இடம் பெற்ற கவிதை)

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்



பிறந்தது புத்தாண்டு
பிறந்தது புத்தாண்டு

வழிகள் பிறக்க‌
வலிகள் மறக்க‌

பிறந்தது புத்தாண்டு
பிறந்தது புத்தாண்டு

இன்பம் பொங்க‌
இனிமை தங்க‌

பிறந்தது புத்தாண்டு
பிறந்தது புத்தாண்டு

ஈரம் சுரக்க‌
ஈழம் செழிக்க‌

பிறந்தது புத்தாண்டு
பிறந்தது புத்தாண்டு

நம்பிக்கை பிறக்க
நன்மைகள் நடக்க‌

பிறந்தது புத்தாண்டு
பிறந்தது புத்தாண்டு

வாழ்க்கை செழிக்க‌
வ‌ள‌ங்க‌ள் கொழிக்க‌

பிறந்தது புத்தாண்டு
பிறந்தது புத்தாண்டு

தமிழ் வளர‌
தமிழன் வாழ‌

பிறந்தது புத்தாண்டு
பிறந்தது புத்தாண்டு

அன்னைத் தமிழில்
அழகுத் தமிழில்
அனைவருக்கும் சொல்வோம்

இனிய தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்த்தாய் வாழ்த்து



தாயினுஞ் சிறந்தது தமிழே ! தரணியி லுயர்ந்தது தமிழே !
வாயுடன் பிறந்தது தமிழே! வாழ்வெல்லாந் தொடர்வது தமிழே !

பாலூட்டி வளர்த்ததும் தமிழே ! தாலாட்டி வளர்த்ததும் தமிழே !
பாராட்டி வளர்த்ததும் தமிழே ! சீராட்டி வளர்த்ததும் தமிழே !

தேம்படு மழலையுந் தமிழே! திருத்திய வுரைகளும் தமிழே !
தேம்பி யழுததுந் தமிழே! தேவையைக் கேட்டதும் தமிழே!

முந்தி நினைந்தலும் தமிழே! முந்தி மொழிந்ததும் தமிழே!
குந்தி யெழுந்த‌தும் தமிழே! குலவி மகிழ்ந்துந் தமிழே!

பயன்படு கல்வியும் தமிழே! பணிபெறப் படுவதும் தமிழே!
அயன்மொழி பயில்வதும் தமிழே!அயன்மொழி நினைவதும் தமிழே!